நெல்லை: தென்காசியில் இருந்து நேற்று நெல்லைக்கு இயக்கிய பஸ்சில் இடமின்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசு ஊழியர்கள் தொங்கியபடி பயணித்தனர். எனவே கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அரசு அலுவலகங்கள் கடந்த 18ம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன. பணிக்கு வருவதற்கு வசதியாக அரசு ஊழியர்களுக்கு மட்டும் அரசு சிறப்பு பஸ்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. ஒரு பஸ்சில் 30 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில வழித்தடங்களில் அதிகளவில் அரசு ஊழியர்கள் ஏறி வருகின்றனர்.குறிப்பாக நெல்லையில் இருந்து வள்ளியூர் மார்க்கமாக நாகர்கோவில் செல்வதற்கும் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வருவதற்கும் பஸ்கள் இயக்கப்படாததால் இந்த பகுதி அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சங்கரன்கோவில், தென்காசி, தூத்துக்குடி மார்க்கத்தில் இருவழியிலும் ஏராளமான அரசு ஊழியர்கள் பணிக்கு வரவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக தென்காசியில் இருந்து நெல்லைக்கு நேற்று காலை புறப்பட்ட பஸ்சில் ஏராளமான அரசு ஊழியர்கள் பயணித்தனர். கல்வித்துறை அழைப்பின் பேரில் சில ஆசிரியர்களும், கல்வித்துறை அலுவலர்களும் அதிகளவில் பணிக்கு திரும்பினர்.