சேலம்: சேலம் அடுத்த பனமரத்துப்பட்டியில் அதிமுக பெண் பிரமுகர், நடுரோட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், மல்லூர் அடுத்த சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தா(50). மரவள்ளிக்கிழங்கு மாவு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும், பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக மகளிரணி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். சாந்தாவின் மருமகள், பனமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால், தினமும் சாந்தா டூவீலரில் சென்று, அவரை அழைத்து வருவார். அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு, டூவீலரில் பனமரத்துப்பட்டி நோக்கி சென்றார். வீட்டிலிருந்து கிளம்பி வெகுநேரமாகியும், சாந்தா பெட்ரோல் பங்கிற்கு வராததால், அவரது மருமகள் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.