முன்கூட்டியே திறக்கப்படுகிறதா மேட்டூர் அணை?: குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை...!

சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருப்பதால், ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மேட்டூர் அணை மூலம் சேலம்,  நாமக்கல், கரூர்,  திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால், டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி  தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், அணையில் இருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இரு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு ஜனவரி 28ம் தேதி, அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே ஆகஸ்ட் 13ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து   276வது நாளாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், நடப்பாண்டில் குறித்த நாளான ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு  உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மேட்டூர் அணையை திறப்பது குறித்து டெல்டா மாவட்ட அமைச்சர்கள், வேளாண்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை  கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் துரைக்கண்ணு, செல்லூர் ராஜூ, காமராஜ், தலைமை செயலாளர் சண்முகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி  வரும் நிலையில், டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா  பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப் பட்டது. அதன் பிறகு 12 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை:

இந்த நிலையில், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 686 கன அடியிலிருந்து 1,018 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி   வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.85 டிஎம்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: