சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு ஆணை காரணமாக அனைத்து வகையான கடன்களுக்குமான மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாத தவணைகளை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு மாதாந்திர கடன் தவணை செலுத்தும் சுமையிலிருந்து தற்காலிக விடுதலை அளித்தது என்பது உண்மை. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி அனைத்து வகையான கடன் தவணைகளும் 3 மாதங்களுக்கு தானாக ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இதை பின்பற்றாமல் அனைத்து தவணைகளையும் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றன.