ஓசூர்: மாநில எல்லையான ஓசூர் பகுதியில் மதுக்கடைகள் வெறிச்சோடிய நிலையில், சரக்கு விற்பனை டல் அடித்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் மதுபானம் விற்பனை தொடங்கியது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும், சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டும், முகக்கவசம் அணியாமலும் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால், விற்பனை சூடுபிடித்தது. ஆனால், மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
குறிப்பாக மாநில எல்லையான ஓசூரில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விற்பனை டல் அடித்தது. கடையை திறந்து ஊழியர்கள் காத்திருந்த போதும், குடிமகன்கள் யாரும் வந்தபாடில்லை. ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 10 பேர் என்ற அளவிலேயே வந்தனர். அதுவும் குறைந்த அளவிலேயே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதால், ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.