கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் வயல்வெளிகளில் இயற்கை உரத்திற்காக விவசாயிகள் ஆட்டுக்கிடை அமைத்து வருகின்றனர். இதனால், விளைநிலங்களில் மண்வளம் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக பாசன வசதி பெறுகிறது. கடந்தாண்டு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல்போக சாகுபடி ஆகஸ்டில் தொடங்கியது. இதையடுத்து டிசம்பரில் அறுவடைப் பணிகள் முடிந்தன. இதை தொடர்ந்து கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதிகளில் இரண்டாம்போக சாகுபடி நடந்தது. தற்போது அறுவடை பணி முடிந்த நிலையில் நிலங்களில் மண் வளத்தை பாதுகாக்க ஆட்டு கிடை அமைத்து வருகின்றனர்.