ஊழியருக்கு கொரோனா தொற்று அரசு மருத்துவமனைக்கு சீல்

சென்னை: ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. பூந்தமல்லி டிரங்க் சாலையில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினசரி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு ெபாது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், சுகாதாரத் துறையினரால்  மருத்துவமனை முழுவதிலும் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இந்த அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனால், சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.  அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்களுக்கும், போரூர், குன்றத்தூர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.  மேலும் இங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள்  மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு பூந்தமல்லி அரசு சுகாதார நிறுவனத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா  என்பது குறித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.  மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களிடம் சோதனை நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது.

Related Stories: