திருப்புவனம்: ஊரடங்கு உத்தரவால் திருப்புவனத்தில் வாழை இலைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் மரத்திலேயே காய்ந்து வீணாகின்றன.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம் புதூர், பழையூர், நைனார்பேட்டை, கலியாந்தூர், அல்லிநகரம், திருப்பாச்சேத்தி, கானூர், கல்லூரணி, பச்சேரி மழவராயநேந்தல் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தின் மூலம் தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வாழை இலைகளை யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே வாழை இலைகள் மரத்திலேயே காய்ந்து வீணாகி வருகின்றன. இவற்றை அறுத்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போட்டு வருகின்றனர்.