தர்மபுரி: தர்மபுரி அருகே ஊரடங்கு எதிரொலியாக முலாம்பழம் அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததால் தோட்டத்திலேயே பழுத்து வீணாகியது. தர்மபுரி மாவட்டத்தில் 100 ஏக்கரில் முலாம்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் முலாம்பழம் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தற்போது அறுவடை நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கினர். விளைபொருட்கள் அறுவடைக்கு சரியான நேரத்தில் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் முலாம்பழம் தோட்டத்திலேயே பழுத்து அழுகிய நிலையில் உள்ளது. மொரப்பூர் அருகே விவசாயி இளங்கோ அரை ஏக்கரில் முலாம்பழம் சாகுபடி செய்திருந்தார்.