கோவை: கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் ‘’பைன் ஆர்ட்ஸ் கிளப் இன் நாட்டியாஞ்சலி’’ அணியின் சார்பாக, பரத நாட்டியம் மூலம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மாணவிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த மாணவிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விழிப்புணர்வு பாடலில் பரதம் ஆடும் மாணவிகள், தங்களுடைய பரத நாட்டியத்தின் மூலம் முக கவசம் அணிவது, கைகளை சோப்பு மூலம் கழுவுதல், சமூக விலகலை கடைபிடிப்பது, வீட்டிலேயே தனித்து இருப்போம், விழித்திருப்போம் போன்ற விழிப்புணர்வுகளை நடன அசைவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாணவிகளுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இவர்களுக்கு, இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.