ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சாந்திபுரம், 4வது தெருவில் உள்ள வீட்டில் மேல்தளத்தில் வசிப்பவர் அனிதா பிலோமினா (42). இவரது கணவர் ஜோஹன்சன். தனியார் கப்பல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 15 மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது. கணவர், கப்பலில் வேலை செய்வதால், அனிதா தனது உறவினருடன் மேற்கண்ட வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். மேலும், வீட்டின் கீழ்தளத்தில் டாக்டர் ஜெயலட்சுமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரது கார்கள் வீட்டு போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் வீட்டின் மீது இடி தாக்கியது. இதில், வீட்டின் போர்டிகோ இடிந்து கீழே விழுந்தது.