நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லிக்காய்களுக்கான தனி மவுசு காரணமாக கேரள வியாபாரிகள் அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். மருத்துவக் குணம் நிறைந்த நெல்லிக்காய்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. தென்காசி, நெல்லை மாவட்டங்களில் தென்காசி, செங்கோட்டை, வீரவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு மலையடிவார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நெல்லிக்கனிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்த பருவமழையால் நெல்லை மாவட்டம் இட்டேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாமரைச்செல்வி பகுதியில் சுமார் 5 ஏக்கரில் விவசாயிகள் நெல்லிக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல்லி மரங்கள் செழிப்பாக வளர்ந்து நெல்லி காய்த்து குலுங்குகிறது. உள்ளூரில் நெல்லிக்காய் கிலோ ரூ.20க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனை பறித்து மூடைகளில் கட்டி வாகனங்களில் ஏற்றிச்செல்ல அதிக செலவாகிறது. இதனால் உள்ளூரில் குறைவாக நெல்லி விற்பனை செய்யப்படுகிறது.