தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் பறிக்காமல் தோட்டத்திலேயே வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பரவலாக காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். சுமார் ஆயிரம் ஏக்கரில் தக்காளி, பீன்ஸ், கேரட், கத்தரி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய- மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளதால் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் காய்கறி கொள்முதலுக்காக வாகனங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், காய்கறி சந்தைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீதமாகும் காய்கறிகளை வீட்டிற்கு எடுத்து வருவதில் சிக்கல் உள்ளதால் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.