முழு ஊரடங்கால் மக்கள் கூட்டம் அலை மோதல்; 5 மாநகராட்சியில் இன்று மட்டும் 3 மணி வரை கடைகள் திறந்திருக்க முதல்வர் பழனிசாமி அனுமதி

சென்னை: இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது.   இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு   வருகிறது. அதன்படி, மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளை காட்டிலும் சென்னை போன்ற மாநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், சென்னை,  கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்  வரும் 26ம் தேதி  முதல் 28ம் தேதி வரையும் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி  முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் 4 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதால், அத்தியவாசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் அலை மோதுகின்றன.

இதற்கிடையே, முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. எனவே, இன்று ஒருநாள் மட்டும் கடைகளின் நேரத்தை மாலை வரை நீட்டிக்க  வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில்  இன்று மட்டும் பிற்பகல் 3 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

Related Stories: