சுரண்டை: வீ.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற 3 பேர், அசுர வேகத்தில் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் அருகேயுள்ள கழுநீர்குளத்தை சேர்ந்தவர்கள் மாடசாமி (59), மருதாலயபாண்டியனின் மனைவி துரைச்சி (55), முத்துபாண்டியின் மனைவி பொன்னம்மாள் (60). இவர்கள் மூவரும் அருகேயுள்ள பகுதியில் உள்ள தோட்டத்தில் புல் அறுப்பதற்காக நேற்று காலை 7 மணி அளவில் அத்தியூத்து - சுரண்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். வடக்கு கழுநீர்குளத்தை கடந்து சென்ற போது இவர்களுக்கு பின்னால் அசுரவேகத்தில் வந்த கார், கண்ணிமைக்கும் வேளையில் மோதியது. இந்த விபத்தில் 10 அடி தொலைவில் உள்ள வயல்வெளியில் தூக்கி வீசப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.