ஏழைகளில் கனவு நினைவாகுமா?; பல்வேறு நாடுகள் தங்கள் மக்களுக்கு கொரோனா நிதியுதவி வழங்கல்...இந்தியாவிலும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

டெல்லி: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக  பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவிலும், ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகள் தங்கள் மக்களுக்கு நிவாரணம் உதவி  அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்திய மதிப்பில் சுமார் 90 ஆயிரம் ரூபாயை வழங்கப்  போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அதில் குழந்தைகளுக்கு 38 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மைக்காகத் தொடரப்பட்ட  காப்பீட்டை வலுப்படுத்த 191 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக ஸ்பெயினில், முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்குப்  படிகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசிடம் இருந்து 80 சதவிகிதம் வரை ஊதியமாகப் பெற்றுக் கொள்ளலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில், மொத்த ஊதியதிலிருந்து 84 சதவிகிதம் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு முழு  சம்பளம் வழங்கப்படுகிறது. டென்மார்க்கில் மூன்று மாதங்களுக்கு 75% ஊதியம் வழங்க அரசு பரிந்துரைத்துள்ளது. எந்தவொரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யக்  கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் வருமானம் இழந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் அந்நாட்டு மதிப்பில் 2 ஆயிரம் டாலர் வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையில் 60 சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. வைரஸ் பரவிய சீனாவில் புலம்பெயர்  தொழிலாளர்களுக்குத் தற்காலிக வாழ்வாதாரத்துக்கான படி அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையிழந்தவர்களுக்கும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே  போல், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், செக் குடியரசு, போலாந்து, நெதர்லாந்து, செர்பியா ஆகிய நாடுகளும் ஊழியர்களுக்கான  நிவாரணங்களை அறிவித்திருக்கின்றன.

இதனை போல், இந்தியாவிலும், ஒவ்வோறு குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர். சில சலுகைகள் அறிவித்தாலும்  மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதால், சலுகைகளை அனுபவிக்க முடியாத நிலைதான் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை குடும்ப அட்டைகளுக்கு  ரூ.1000 வழங்கப்பட்டாலும், ரூ.1000 கொண்டு ஒரு மாதம் குடும்பத்தை நடத்தி செல்வது என்பது யாராலும் ஏற்க முடியாது. எனவே, மத்திய, மாநில அரசுகள்  உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories: