புதுச்சேரி: புதுவையில் ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய லாஸ்பேட்டை காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே அவர்கள் மோதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் கொரோனா தடுப்புக்காக சீல் வைக்கப்பட்ட பகுதியான மூலகுளத்தில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை காவலர் அரவிந்தராஜ் மப்டியில் நுழைய முயன்றார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் அசோக் தடுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்தராஜ், அசோக்கை தாக்கியுள்ளார். இதுபற்றி அசோக் அளித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார், அரவிந்தராஜை கைது செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.