முன்விரோத தகராறில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: சகோதரர்களுக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (25). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (35). இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுதாகர் தனது பிறந்தநாள் விழாவை, அருண்குமார் மற்றும் நண்பர்கள் ஐந்து பேருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அவரது பின் வீட்டில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவருக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அசோக்குமார், சுதாகர் உட்பட 5 பேர் ஒன்று சேர்ந்து சுரேஷ்குமாரை கத்தியால் வெட்டினர். இதில் கையில் வெட்டுக்காயம் அடைந்த சுரேஷ்குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து 5 பேரை கைது செய்தனர். இதனால் சுரேஷ்குமாருக்கும், அசோக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் வெளியே அசோக்குமார் உட்காந்திருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த சுரேஷ்குமார், அவரது தம்பி சுரேந்திரன் ஆகியோர், கத்தியால் அசோக்குமாரை சரமாரியாக வெட்டினர். அசோக்குமார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் இருவரும் தப்பினர். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அசோக்குமாரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: