டெல்லி: காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் கடந்த சில தினங்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், காஷ்மீரில் உள்ள நிலமை குறித்து ஆய்வு செய்ய இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அங்கு சென்றார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகில் உள்ள 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா மருந்து, மாத்திரைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே அளித்த பேட்டியில் கூறியதாவது; இந்தியாவும் உலகின் பிற பகுதிகளும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் நேரத்தில் பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது.