சென்னை : சாலையில் வாகனம் அல்லது நடந்து செல்பவர்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்படும். பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை : கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.