முகக்கவசம் போடாவிட்டால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

சென்னை : சாலையில் வாகனம் அல்லது நடந்து செல்பவர்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்படும். பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை :  கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ்  சென்னை மாநகராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் வெளியே வரும்போது, கொரோனா வைரஸ் நோய் தொற்று சமூகபரவலை தவிர்ப்பதற்காக முகக்கவசம் அணிந்து  வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் நபர்கள் குற்றம் செய்ததாக கருதப்பட்டு காவல் துறையின் மூலம் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும். மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பாதசாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறைகள் உடனடியாக  அமலுக்கு வருகிறது.

Related Stories: