வி.கே.புரம்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக பாபநாசம் அணை விளங்குகிறது. இந்த அணையின் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் பாபநாசம் அணை திகழ்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பாபநாசம் அணை நிரம்புவது வழக்கம். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை வெளுத்து கட்டியது. இதனால் பாபநாசம் அணை நவம்பர் மாதமே நிரம்பி வழிந்தது. அணை நிரம்பினாலும் உபரிநீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. இதனால் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை திறக்கப்பட்டாலும், டிசம்பர் இறுதி வரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடித்தது.