தாம்பரம்: செம்பாக்கம் நகராட்சி சார்பில் காய்கறிகள் வினியோகம் செய்வதில் அதிமுகவினர் குளறுபடி செய்வதாகவும், அதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவையை தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், வீடுகளில் முடங்கியுள்ள மக்களின் வசதிக்காக ஆங்காங்கே நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் சார்பில் நடமாடும் காய்கறி அங்காடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களுக்கு வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவராக சமூக இடைவெளியில் வந்து காய்கறிகளை பணம் செலுத்தி பெற்று செல்கின்றனர். தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உறவினர்கள் 28 பேர் வசிக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தெருக்களின் 16 நுழைவாயில்களில் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர்.இந்நிலையில், நடமாடும் காய்கறி அங்காடி மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் காய்கறிகளை ஆளும்கட்சியை சேர்ந்த நகராட்சி முன்னாள் தலைவர் தலையிட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஆளும்கட்சியினர் ஒவ்வொருவரை நியமித்து அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகளை வினியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு திமுக மற்றும் பிற கட்சிகள் சார்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.