ரோம்: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, உலகளவில், கொரோனாவால் அதிகம் உயிரிழந்தவர்களில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இங்கு காட்டுத்தீயாக வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது.
இருப்பினும், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உயர்ந்துதான் வருகிறது. இதுவரை, இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,849 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,577 ஆக உயர்ந்துள்ளது. 30,445 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, இத்தாலியில் கொரோனா பாதிப்பால் நூறுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இத்தாலி மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் இத்தாலியின் சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.