விருதுநகர்: விருதுநகர் அருகே வீடு, வீடாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இவற்றை சமூக இடைவெளியுடன் மக்கள் வாங்கி செல்கின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஏப்ரல் மாத ரேஷன் பொருட்கள் இலவசம் என அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில், விருதுநகர் அருகே ஆவடையாபுரத்தில் டெல்லி சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வீடு, வீடாக விநியோகம் செய்யப்படுகிறது.