செய்யூர்: சூனாம்பேடு அருகே சுகாதாரமற்ற குடிநீரை குடித்த பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் சூனாம்பேடு ஊராட்சி புதுப்பட்டு கிராமத்திற்கு தாமோதரன் என்பவர் வந்தார். கடந்த 3ம் தேதி அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள், அவரை மதுராந்தகம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த அன்பு (40) என்பவருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. அவரையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், அதே பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, வினோத்குமார் (27), பாலு (38), வெண்ணிலா (55), சின்ன பொண்ணு (35), முருகேசன் (56) ஆகியோருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.