திருவொற்றியூர்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை டெல்லியில் நடந்த முஸ்லிம் அமைப்பின் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டில் பங்குபெற்றவர்கள் பற்றி மத்திய, மாநில அரசுகள் தீவிர விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் பலரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து 1,131 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு 515க்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்தல், மற்றவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.