புதுடெல்லி: பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முதல்வர்கள் ஆளும் ராஜஸ்தானின் அசோக் கெலாட், பஞ்சாபின் அமரீந்தர் சிங், சட்டீஸ்கரின் பூபேஷ் பாகல், புதுச்சேரி நாராயணசாமி ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 4.4 கோடி கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறிப்பாக நகரங்களில் சிக்கி தவிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இரண்டாவதாக அதிகளவு பணியாளர்களை கொண்ட கட்டுமான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது.
கொரோனா பாதித்த கனடா நாட்டில், பொதுமக்களுக்கு அந்த அரசு சம்பள நிதியுதவி அறிவித்துள்ளது. இதுபோல் மத்திய அரசும் நிதியுதவி அறிவிக்கவேண்டும். இத்தகைய அசாதரண சூழ்நிலையில் மாநில அரசுகள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் ஆகியவை வேலையின்றி தவிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கூலியை நிதியுதவியாக வழங்கவேண்டும்.