ஜெய்ப்பூர்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்து பேரல் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலராக விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் ₹5 வரை குறையும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும், இதன் பயனை நுகர்வோருக்கு அளிக்காமல் மத்திய அரசு கடந்த 13ம் தேதி எரிபொருள் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹3 உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை திடீரென 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி முறையே 30-ல் இருந்து 34 ஆகவும், 22ல் இருந்து 26 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.