பூந்தமல்லி: மதுரவாயல் அருகே காரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், சக்தி நகர், 18வது தெருவை சேர்ந்தவர் நேதாஜி (24), சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையில் ஐ.ஏ.எஸ். படித்து வருகிறார். நேற்று பிற்பகல் மதுரவாயலில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மதுரவாயல், கார்த்திகேயன் நகர் அருகே நடந்து சென்றபோது காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் நேதாஜியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 1.5 சவரன் நகை மற்றும் 500 பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து நேதாஜி மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். புளியந்தோப்பு வஉசி நகர் 2வது தெருவை சேர்ந்த பொம்மி (40) என்பவரை முன்விரோத தகராறில் வீடு புகுந்த தாக்கிய உறவினர்கள் அர்ஜூன் (28), பிரசாந்த் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.