பெங்களூரு: ஓசூர் அலசனத்தம் பகுதியில் சிலிண்டர் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்காட்டி வருகின்றனர். ஓசூர் அலசனத்தம் பகுதியில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் அருகிலுள்ள நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓசூரில் இருந்து சிலிண்டர் ஏற்றிவந்த லாரியானது வசந்தநகர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஏறி, இறங்கியுள்ளது. அச்சமயம் லாரியில் இருந்த சிலிண்டரின் மூடியானது திறக்கப்பட்டு கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதற்கு முன்பாகவே கேஸ் கசிவால் சிலிண்டர்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.