மாணவிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவருக்கு சரமாரி செருப்படி: உறவினர்கள் ஆவேசம்

திருமலை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு சரமாரி செருப்படி விழுந்தது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோரேரி பகுதியில் ஜில்லா பரிஷத் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவிகள் ஆட்டோக்களில் பள்ளிக்கு வருகின்றனர். அவ்வாறு பள்ளிக்கு வரும் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (28) கடந்த ஒரு வாரமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் நேற்று காலை வழக்கம்போல் மாணவியை பள்ளிக்கு அனுப்பி விட்டு பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது அந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ், மாணவியிடம் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவரை, மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பள்ளிக்கூட வளாகத்திற்கு இழுத்து சென்று தாக்கினர். மேலும் மாணவியின் தாய் செருப்பால் சரமாரி தாக்கியுள்ளார். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவரை பாலக்கோரேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் ரமேஷை கைது செய்தனர். இதற்கிடையே மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Related Stories: