சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில், கிராமமக்கள் ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர். முதுகுளத்தூர் பகுதியில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தொடர் வறட்சியால் கண்மாய்கள் வறண்டு காணப்பட்டது. ஆண்டுதோறும் மழை பெய்தாலும் கூட, கண்மாய் பெருகும் அளவிற்கு கனமழை பெய்யவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்த வடகிழக்கு பருவ மழைக்கு முதுகுளத்தூர் பகுதியில் பெரும்பாலான கண்மாய், ஊரணி நிறைந்தது. இந்நிலையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கீழத்தூவல் கண்மாய் நிறைந்து காணப்பட்டது. கண்மாய் பெருகியதும் கெண்டை வகை மீன்கள், கெளுத்தி, உளுவை, கொறவை, அயிரை போன்ற மீன்கள் வந்தது. அதனுடன் கிராமமக்கள் வெளிமார்க்கெட்டில் விலைக்கு வாங்கி வந்த மீன்களையும் விட்டு வளர்த்து வந்தனர். வலை, தூண்டில் போன்றவற்றின் மூலம் மீன்பிடிக்க கிராமமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வெளியூர் நபர்கள் வந்து பிடித்து விட கூடாது என்பதற்காக ஊர் காவலர்கள் நியமிக்கப்பட்டு, காவல்காத்து வந்தனர்.