குடியாத்தம்: குடியாத்தம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த யானைகளை விரட்டுவதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து யானைகளை விரட்டும் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அந்த 14 யானைகள் குடியாத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அருகே உள்ள குடிம்பிபட்டி கிராமத்திற்கு வந்த யானைக்கூட்டம் அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைய முயன்றது.