கோவை: பஸ் ஸ்டாண்ட்களில் நிற்கும் அரசு பேருந்துகளில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து செல்பி, டிக்டாக் வீடியோ எடுக்கும் நபர்களால் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் முக்கியமான பேருந்து நிலையங்களில் 10 நிமிடங்கள் வரை நிறுத்தப்படுகின்றன. அப்போது பேருந்தை அதற்குரிய ரேக்கில் நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உணவருந்த செல்கின்றனர். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ளும் சில சேட்டை வாலிபர்கள் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பேருந்தை இயக்குவதை போல் செல்பி எடுத்தும், டிக் டாக் வீடியோவும் எடுக்கின்றனர். கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஈரோடு முதல் பாலக்காடு வரை செல்லும் உக்கடம் 1 கிளையை சேர்ந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து டிக் டாக் மற்றும் செல்பி எடுக்கும் வாலிபரின் செயல் வாட்ஸ் ஆப் குரூப்களில் வைரலாகி வருகிறது.