கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடன பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி, மேலூர் முனீஸ்வரன் கோயில் அருகே பனிகுண்டு பாறை அடியில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு அரிய வகை பாறை ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியது: இது ஒரு அரியவகை பாறை ஓவியம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெண்சாந்து ஓவியங்களே அதிகளவில் காணப்படுகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக செஞ்சாந்து ஓவியங்கள் காணப்படுகிறது. தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள முழு ஓவியமும் வெளிரிய செஞ்சாந்து ஓவியம் ஆகும்.