சென்னை: கடனாக கொடுத்த 20 லட்சத்தை திரும்ப கேட்ட அமெரிக்க நாட்டு முதியவரை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் விசாரணையை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கண்காணிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த கேத்தரின் ஜீன் ராபர்ட் (62) தாக்கல் ெசய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நானும் எனது அண்ணன் ஜான் உட்ரோ ராபர்ட்டும் (72) கடந்த 2010ல் திருவண்ணாமலைக்கு வந்தோம். அங்குள்ள அக்கனிசேஷ்திரத்தில் எங்களது ஆத்மாவை தூய்மைப்படுத்துவதற்காக திருவண்ணாமலையில் தங்கியிருந்தோம்.இந்நிலையில் எங்களுக்கு இந்தியாவில் தங்குவதற்கு நிரந்தர விசா வாங்கித்தருவதாக திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்த விக்னேஷ் என்பவர் எனது அண்ணனிடம் கூறினார். அதற்காக எனது அண்ணனிடம் இருந்து ₹20 லட்சத்தை வாங்கிக்கொண்டார்.ஆனால், அவர் உறுதியளித்தபடி விசா வாங்கித்தரவில்லை. அதற்கு மாறாக விக்னேஷ் துபாய் சென்றுவிட்டார். தொடர்ந்து எனது அண்ணன் விக்னேசிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால், விக்னேஷ் தரவில்லை. இந்நிலையில், 2019 ஜூன் 19ம் தேதி விக்னேஷ் துபாயில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அவரிடம் எனது வக்கீல் கிஷோர்குமார் மூலம் பணத்தை கேட்டோம். அவரிடம் அவசரமாக சென்னை செல்வதாகவும் வந்தவுடன் சந்திப்பதாகவும் விக்னேஷ் கூறியுள்ளார். மறுநாள் எனது அண்ணனை மதுரவாயலுக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தன்னை திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லுமாறு எனது அண்ணன் கூறியுள்ளார். ஆனால், விக்னேஷ் எனது அண்ணனை வேலூர் சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஒரு ஓட்டலில் எனது அண்ணனுக்கு தண்ணீர் வாங்கிகொடுத்ததுடன் ஒரு நயிலான் கயிறையும் வாங்கியுள்ளார்.