சிவகாசி: சிவகாசி பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து கால்வாய் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. சிவகாசியிலிருந்து விளாம்பட்டி வழியாக ஆலங்குளம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களுக்கு அரசு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. இந்த சாலையில் பட்டாசு ஆலை, பள்ளிகள் உள்ளன. இதனால் டூவீலரில் இந்த சாலையில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். அத்துடன் காலை, மாலை பள்ளி நேரங்களில் பள்ளி வாகனங்களும் அதிகம் செல்கிறது. இங்கு சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரையை ஓட்டி விளாம்பட்டி சாலை செல்கிறது. கிச்சநாயக்கன்பட்டி, சித்துராஜபுரம், போத்தி ரெட்டியபட்டி பகுதி மழைநீர் பெரியகுளம் கண்மாய் வந்தடையும். இதற்காக பெரியகுளம் அருகே விளாம்பட்டி சாலையை ஓட்டி நீர்வரத்து கால்வாயும் அமைந்துள்ளது. சாலையின் இரு புறமும் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய் உள்ளதால் இது ஆபத்தான சாலையாக உள்ளது.