நாமக்கல்: நாமக்கல் அருகே நள்ளிரவில், லாரி- கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு, நேற்றிரவு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. திருச்சி செல்லும் சாலையில் சின்னவேப்பநத்தம் பகுதியை நள்ளிரவு11.15 மணியளவில் கடக்கையில், திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த டாடா சுமோ கார், லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், டாடா சுமோ காரில் இருந்த டிரைவர் உட்பட 6 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் கார் மற்றும் லாரி பயங்கர சேதமடைந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அந்த காருக்குள் இருந்த 6 சடலங்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.