கொரோனா வைரஸ் பாதிப்பு விவகாரம்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.  இந்த மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லும் குழந்தைகளால் பின்பற்ற முடியாது என்பதால், தமிழகத்தில் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளி வரை விடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிடக் கோரி, சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குழந்தைகளையும் வயதானவர்களையும் இந்த நோய் எளிதில் தாக்குகிறது என்பதால், குழந்தைகளை பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏதும் இல்லை’ என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவேண்டும்என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.  இதுகுறித்து தமிழக அரசுக்குஉத்தரவிடவும் முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும், ‘பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: