புது டெல்லி: ஜோர்டனில் நடந்த ஆசிய அளவிலான ஒலிம்பிக் தகுதி குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம், சிம்ரன்ஜித் கவுர், லவ்லினா, பூஜா ராணி, அமீத் பங்கல், மனீஷ் கவுசிக், விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஷ் குமார் உட்பட 13 வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்றனர். போட்டி நேற்று முன்தினம் முடிந்த நிலையில் எல்லோரும் இன்று மாலைக்குள் இந்தியா திரும்புவார்கள். அப்படி திரும்பும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனியாக தங்க வைக்கப்பட உள்ளனர்.
இது குறித்து இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயல் இயக்குநர் ஆர்.கே.சசேத்தி, ‘இந்திய குத்துச் சண்டை வீரர்கள் பிப்.27ம் தேதி வரை இத்தாலி நகரம் அஸ்ஸசியில் பயிற்சி பெற்றனர். அதன் பிறகு ஜோர்டானில் நடைப்பெற்ற போட்டியில் பங்கேற்றனர். அவர்களுக்கு காய்ச்சல், சளி என எந்த பிரச்னையும் இல்லை என்று ஜோர்டான் அரசு சான்றளித்துள்ளது. இருப்பினும் அவர்கள் தாயகம் திரும்பியதும் வீடு அல்லது விடுதியில் தனியாக 14 நாட்களுக்கு தங்க வைக்கப்படுவார்கள். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதுடன், தொடர்ந்து மருத்துவர்கள் உதவியுடன் கண்காணிக்கப்படுவர்.
அரசு வழிகாட்டுதலின்படி நடைமுறைகள் முடிந்ததும் அவர்கள் இயல்பான பணிகளை தொடரலாம். இதில் அச்சம் கொள்ள ஏதுமில்லை’ என்று கூறியுள்ளார்.