புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ, சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கான வட்டியை 3 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேபோல், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு கட்டாயம் ஆக்கியது. இதன்படி, பெருநகரம் என்றால் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 3,000, புறநகர்களில் 2,000, கிராமப்புறங்களில் 1,000 வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அபராதமாக 5 முதல் 15, ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்த பட்ச இருப்பு நிபந்தனையை எஸ்பிஐ நேற்று ரத்து செய்துள்ளது. இதுபோல், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எஸ்எம்எஸ் என்ற குறுந்தகவல் அனுப்புவதற்காக காலாண்டிற்கு ஒரு முறை வசூலிக்கப்படும் கட்டணத்தையும் வங்கி ரத்து செய்துள்ளது. சேமிப்பு கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்தால் அதற்கு ஆண்டிற்கு 3.25 சதவீதம் வட்டி ஒரு லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கு 3 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. தற்போது இந்த வட்டி விகிதத்தை ஒரு மாதிரியாக 3 சதவீதமாக எஸ்பிஐ நிர்ணயித்துள்ளது.