பல இடங்களில் கைவரிசை கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் கிழக்கு, புகழேந்தி சாலையை சேர்ந்தவர் லதா (52). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் 21ம் தேதி கடையில் இருந்து வீடு திரும்பியபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், லதாவை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், முகப்பேர் பச்சையப்பன் சாலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே பைக்கில் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை விரட்டி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

விசாரணையில், அவர்கள் வேலூரை சேர்ந்த கோபி (35), ஆவடியை சேர்ந்த சிவனேசன் (20) என்பதும், கடந்த மாதம் 21ம் தேதி லதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பைக்கில் சுற்றிவந்து செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 9 சவரன் நகை மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: