உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் விளக்கமளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ல் பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் அவரது அரசுக்கு எதிராக, கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள்  பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி பெரும்பான்மையை இழக்கவில்லை. இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானமும் வெற்றி பெற்றது.

இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை.  இதையடுத்து திமுக தரப்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா  சக்கரபாணி தரப்பில் உச்ச நீதீமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் கடந்த மாதம் 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டாக ஒரு நோட்டீஸ் கூட அனுப்பி நடவடிக்கை  எடுக்காமல் இருந்தது ஏன், இதுபோன்ற விவகாரத்தில் குறைந்தது மூன்று மாதத்தில் ஏதாவது ஒரு நடவடிக்கையை சபாநாயகர் எடுத்திருக்க வேண்டும் என சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதி, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  குறித்து பிப்.14ம் தேதிக்குள் தமிழக சட்டசபை செயலாளர் அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து, இந்த வழக்கு, பிப்ரவரி 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

சபாநாயர் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், தலைமை நீதிபதி முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் தற்போது விளக்கம் கேட்டு  சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு  சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வார் என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை முடித்து  வைப்பதாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 11 பேர் மீதும் நடவடிக்கை  எடுப்பது குறித்து சபாநாயகர் தனபால் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்றைய  கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம்  தொடங்குகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு எதிராக  வாக்களித்தது குறித்த விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: