முனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்: 150 கிடாய், 300 கோழிகள் பலியிட்டு ‘கமகம’ பிரியாணி பிரசாதம்... ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை : மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவில் 10,000 பேருக்கு சுட சுட பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் அன்னதான திருவிழா நடப்பது வழக்கம். பல்வேறு ஊர்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் இந்த விழாவில் பங்கேற்பர். இந்த கோயிலில் 85வது ஆண்டு பூஜை விழா நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திகடனாக வழங்கிய 150 ஆடுகள், 500 சேவல்கள் மற்றும் 2,500 கிலோ அரிசியை கொண்டு செய்யப்பட்ட பிரியாணி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.அ

சைவ பிரியாணி நோய் தீர்க்கும் மருந்து என்று விழாவில் பங்கேற்ற பக்தர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். ஸ்ரீமுனியாண்டி சுவாமி பெயரில் நாடு முழுவதும் அசைவ உணவகங்கள் நடத்தி வரும் தொழில் அதிபர்கள் இந்த விழாவை நடத்தியுள்ளனர். வடக்கம்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பாக பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனால் அந்த கிராமம் முழுவதும் பிரியாணி மணம் கமழ்ந்தது. இந்த விழாவில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் முனியாண்டி கோயில்கள் உள்ளன.

ஆனால் வடக்கம்பட்டி கோயில் தான் ஆதிமுனியாண்டி கோயிலாகும்.இங்கிருந்து பிடிமண் எடுத்து சென்று பல்வேறு ஊர்களில் முனியாண்டி கோயில் கட்டப்படுகிறது. இங்கு நடைபெறும் பிரியாணி திருவிழா புகழ் பெற்றதாகும். தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் மற்றும் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். இங்கு மட்டுமே பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்படுகிறது’’ என்றனர்.

Related Stories: