புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கெஜ்ரிவால் அரசு நிவாரணம் அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு டெல்லியில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் 46 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதை எதிர்த்து பாஜ முன்னாள் எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என கூறி தள்ளுபடி செய்தனர். இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இது அரசின் கொள்கை முடிவு என ெடல்லி அரசு தெரிவித்துள்ளது. எனவே இதில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.