முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூறு குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தற்போது பொதுமக்கள் கண்ணில் படுவது 10க்கும் மேற்பட்ட குளங்கள்தான். அதுவும் மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் குளங்கள் மாறிவருவதால் பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களை வேதனை அடைய வைக்கிறது. இந்நிலையில் பேரூராட்சிக்கு உட்பட பேட்டையில் உள்ள தாமரைக்குளம் இப்பகுதியில் மிகப்பெரிய பரப்பளவில் பரந்துவிரிந்துள்ளது. இக்குளத்தில்தான் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் குளித்தும் மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் அப்பகுதிக்கு நீராதாரத்தையும் பெற்று தரும் ஒரு குளமாகவும் உள்ளது. இந்நிலையில் தற்போதைய இந்த தாமரைக்குளத்தையும் சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் குளத்திற்கு நீர் வரத்து பாதையும் தடைப்பட்டு குளம் சுருங்கி குட்டையாகி வருகிறது. மேலும் தற்போதுள்ள மிச்சம் மீதி குளத்தையும் வேலிக்கருவை, கருவேல மரங்கள் படர்ந்து குளத்தின் சிரதன்மையை கெடுத்து வருவதுடன், தண்ணீரையும் மாசுபடுத்தி வருகிறது. அதேபோல் வறட்சியால் தேங்கி கிடக்கும் தண்ணீரையும், உறிஞ்சி குளம் வரண்டு வருகிறது. சுற்றுப்புற தடுப்பு சுவர்களும் சேதமாகி ஆங்காங்கே இடிந்து விழுந்து காணப்படுகிறது.