சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கடத்துவோம் என அல்-ஹக் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு அல்-ஹக் என்ற இயக்கத்தின் பெயரில் கையெழுத்தில்லாத கடிதம் வந்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மிரட்டல் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த 14ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 19வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. தொடர்ந்து, போராட்டக்குழு நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பேசினார். எனினும் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பிலும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றது.