கொழும்பு: இலங்கையில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்துவதற்காக நாடாளுமன்றத்தை, அதன் பதவிக் காலம் முடிவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று உத்தரவிட்டார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற பின், இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். பின்னர், தனது அண்ணன் மகிந்தா ராஜபக்சேயை இடைக்கால பிரதமராக கோத்தபய நியமித்தார். சிறிசேனாவும், ரணில் விக்ரமசிங்கேயும் அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்தபோது அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், 19ஏ திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தம், தற்போதைய அதிபர் கோத்தபயவுக்கு பல வகைகளில் தடையாக உள்ளது. இதில் மீண்டும் திருத்தம் கொண்டு வர அவர் விரும்புகிறார். மேலும், 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு ஆதரவு தனது கட்சிக்கு இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்.