குன்னூர்: கோத்தகிரி அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் மூன்று கரடிகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்குகளான யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்டவைகள் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர், உணவு தேடி இரவு மற்றும் பகல் நேரங்களில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து சில சமயங்களில் குடியிருப்புகளிலேயே தஞ்சம் புகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி கேத்தரீன் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையின் ஓரத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர், உணவு தேடி 3 கரடிகள் தேயிலை தோட்டத்திலிருந்து சுவர் ஏறி குடியிருப்பு அருகில் வந்துள்ளன. தொடர்ந்து கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.