டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தால் மூலப்பொருள் வழங்கலும், உற்பத்திப் பொருள் ஏற்றுமதியும் பாதிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தினமும் நூற்றுக்கணக்கா மக்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த நிலையில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவுவது குறைய தொடங்கியுள்ளது. இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது.
சீனாவில் நேற்று மேலும் 29 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,744 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். அதன்பின்னர் இப்போதுதான் அந்த அளவை விட இறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 78,500 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 433 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்கள் நலிவடைவதாக தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா வைரஸ் எதிரொலியாகத் தொழில்துறையினரைத் தான் சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்டார். அப்போது, நான் சுமார் 23 தொழில்துறையினருடன் சந்திப்பை நடத்தியுள்ளேன், தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள் வழங்கலும், உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதாக அவர்கள் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை என்றார். அதேநேரத்தில் மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக யாரேனும் தெரிவித்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும் எனவும் தெரிவித்தார். இருப்பினும், அவர்களில் சிலர் 2 மாதங்களுக்குப் பிறகு வைரஸைக் கொண்டிருப்பது குறித்து நிலைமை மேம்படவில்லை என்றால், மூலப்பொருள் கிடைப்பதில் சில சிக்கல்களைத் தொடங்கலாம் என்று உணர்ந்தனர். நாங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பார்க்க முயற்சிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.